பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: தேர்வுத்துறை எச்சரிக்கை

'தமிழகத்தில் மே 25ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்போது, பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் சீலிடப்பட்ட கவர்களில் உள்ள மதிப்பெண்ணை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.மே 17ல் காலை 10:31 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால், காலை 9:00 மணிக்கே பல மாவட்டங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விவரம் புகைப்படங்களுடன் 'வாட்ஸ் ஆப்'ல் வெளியாகின. இதனால் தேர்வுத்துறை அதிர்ச்சி அடைந்தது. இதுகுறித்து விசாரணை நடக்கிறது.
இந்நிலையில், 'மே 25ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9:31 மணிக்கு வெளியாகவுள்ளன. ஆனால், அதற்கு முன் மதிப்பெண் பட்டியல் விவரங்களை அறியும் முயற்சியில் ஈடுபடும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

அதிகாரி ஒருவர் கூறியதாவது:பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான முதல்நாள் மாவட்ட வாரியான மாணவர் தேர்ச்சி விவரத்தை 'சிடி'யாக ஒவ்வொரு முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டன. மேலும் 'நோடல்' அலுவலகங்கள் மூலம் பள்ளிகள் வாரியான மாணவர் மதிப்பெண் பட்டியலும் 'சீல்' வைக்கப்பட்ட கவர்களில் அனுப்பப்பட்டன.

இந்த கவர்கள் காலை 10.31 மணிக்கு பிரித்து அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். ஆனால், கிருஷ்ணகிரி உட்பட சில மாவட்டங்களில் காலை 9.00 மணிக்கு சில பள்ளிகளில் சீலிடப்பட்ட கவர்கள் பிரிக்கப்பட்டன. இதுகுறித்து விசாரணை நடக்கிறது. மே 25ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் நிலையில் 9.31 மணிக்கு தான் சீலிடப்பட்ட கவர்களை பள்ளிகளில் பிரிக்க வேண்டும். ஆனால் அதற்கு முன் கவர்கள் பிரித்து விதிமீறலில் பள்ளிகள் ஈடுபட்டால் அப்பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.